education

img

பொறியியல் படிப்பு சேர்க்கையிலிருந்து 44 ஆயிரம் மாணவர்கள் விலகல்

சென்னை:
பொறியியல் படிப்பு சேர்க்கையிலிருந்து 44 ஆயிரம் மாணவர்கள் விலகியுள்ளனர்.பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தாமல் ஏற்கெனவே 30 ஆயிரம் பேர் விலகியிருந்தனர். இந்நிலையில், தற்போது சுமார் 14 ஆயிரம்பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்யாமல் கலந்தாய்வில் இருந்து விலகியது தெரியவந்துள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 அன்று நிறைவு பெற்றது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.இதில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 118 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி இருந்தனர். அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில் 30,215 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தாமல், கலந்தாய்வில் இருந்து விலகினர்.

சுமார் 1.14 லட்சம் மாணவர்களே தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய மாணவர்களில் சுமார் 14 ஆயிரம் பேர் சான்றிதழை பதிவேற்றம் செய்யாமலேயே கலந்தாய்வில் இருந்து விலகியுள்ளனர். இதனால், கலந்தாய்வு தொடங்கும் முன்பாகவே பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த 44 ஆயிரம் மாணவர்கள் விலகியது தெரிய வந்துள்ளது.தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறியபோது, ‘‘பொறியியல் கலந்தாய்வுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஓரிருநாளில் வெளியிடுவார். பொறியியல் சேர்க்கை இணையதளம் மூலமாகவே சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது என்று தெரிவித்தார்.

;